Tuesday, June 29, 2010

அன்னை

சென்ற மாதம் குழந்தையின் எதிர்பார்ப்பை என் எண்ணோட்டத்தில் பதிவு செய்தோம். அன்னையின் அருகாமையும் அன்பையும் அனுபவித்து கொண்டிருக்கும் எனக்கு, தாயின் அன்பை பற்றி தோன்றிய எண்ணங்களை ஒரு கவிதையாய் பதிவு செய்ய விருப்பம். நான் எழுதும் வரிகளில் அடங்கிடாது இந்த அன்பு. ஆயிரம் புலவர்கள் வந்தாலும் பல்லாயிரம் கவிதைகள் தந்தாலும், எந்த ஒரு அன்பையும் , பாசத்தையும் உணர்ந்தால் மட்டுமே சுகம். இச்சுகம் கிட்டாத குழந்தைகளுக்கு மடி சுமக்கா அன்னையாய் வாழும் பல உள்ளங்களை வாழ்த்தி வணங்குவோம்.

அன்னையே,

நின்னுள்ளே உயிர் தந்து
பத்து திங்கள் மடி சுமந்து
மாரணைத்து பசி தீர்த்து
எறும்பு ஈ அன்டிடாமல்
இமையாக எனை காத்து...........

ஏறி நான் விளையாட
குதிரையாய் வலம் வந்து
சோகங்கள் காணாமல்
சுமையெல்லாம் நீ ஏற்று
ஊர் மெச்ச நான் வளர
உரமாக உனை இட்டு............

உன் தோழி நான் என்று
துயர் துடைத்து மகிழ்வித்து
உடையவன் கைபிடிக்க இரு
கண்ணில் நீர் கோர்த்து
ஊர் காவல் தெய்வமெல்லாம்
எனை காக்க வேண்டி நின்று............

எனக்கும் அன்னையாய் என்
பிள்ளைக்கும் அன்னையாய்
நான் உதித்த காலம் கொண்டு
நீ மறையும் காலம் வரை
என்றும் உன் நினைவில்
உயிராக நிதம் காப்பாய்.............

ஆயிரம் உறவுகள் அருகில்
நான் கண்டாலும், அன்னை
உன் அன்பிற்கு ஈடுன்றோ இவ்வுலகில்
கோடிகள் கொடுத்தாலும் உனை
கோவில் கொண்டு தொழுதாலும்,
கொண்ட கடன் தீர்ந்திடுமோ.........

என் நன்றி உனை சேர வேண்டி,

வரம் வேண்டும் வரம் வேண்டும்
உனை மடிசுமக்க வரம் வேண்டும்
மறு ஜென்மம் உண்டென்றால் என்,
மகளாக உனை வளர்க்க ...
வரம் வேண்டும் வரம் வேண்டும்
உனை மடிசுமக்க வரம் வேண்டும்............